THIRUVEMBAVAI திருவெம்பாவை

இந்த உலகைப் படைத்துக் காக்க சிவனில் நவசக்திகள் தோன்றி செயல்படுவதை திருவெம்பாவையின் பாடல்கள் உணர்த்துகின்றன.ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை போற்றி மாணிக்க வாசகர் பாடிய திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் படித்து மகிழுங்கள்.

Sunday, January 13, 2008

ஆரமுதே பள்ளியெழுந்தருள்



திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 10








" புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று " நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்! திருமாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய்;
ஆரமு தே; பள்ளி எழுந்தருளாயே.........(10)


பொருள்:திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! எங்கும் நிறைந்த அமுதமே! எம்பெருமானே! நீவிர் உயிர்களுக்கெல்லாம் ஈடேற்றம் வழங்கி ஏற்றுக் கொள்வது, இந்த மண்ணுலகத்தின் வழியாகவே என்னும் உண்மையை உணர்ந்த திருமாலும் நான்முகனும், தாங்களும் இந்த மண்ணுலகத்தில் போய் பிறக்காததால் வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழிக்கின்றோம் என்று ஏங்குகின்றனர்.

இப்படி திருமால் விரும்பும்படியும், நான்முகன் ஆசைப்படும்படியாகவும் உன் மலர்ந்த மெய்க் கருணையும் நீயுமாக இம்மண்ணுலகத்திற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே!  அன்பர்களுக்கு தெவிட்டாத ஆரமுதமானவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!

திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி முற்றியது


குறையேதும் இருந்தால் அது அடியேனுடையது நிறைகள் அனைத்தும் மாணிக்கவாசகரின் திருவடிகளில் சமர்ப்பணம்.

Labels: , , ,

உலகுக்குயிரானாய் பள்ளியெழுந்தருள்

 
திருசிற்றம்பலம் 

திருப்பள்ளியெழுச்சி # 9




விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்படியோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமு தே! கரும்பே! விரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே........(9)





பொருள்: வானுலகில் உள்ள தேவர்களும் அடைய முடியாத மெய்ப்பொருளே! இந்த மண்ணுலகில் வந்து உன்னுடைய அடிமைகளாகிய எங்களை வாழச் செய்த வள்ளலே! வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்த அரசே!

பரம்பரை அடியவர்களான எங்களுடைய கண்ணினுள்லே நின்று காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பை வழங்கும் தித்திக்கும் தேனே! பாற்கடலில் தோன்றிய அமுதமே! நெஞ்சில் இனிக்கும் கரும்பே! அன்பு செய்யும் மெய்த்தொண்டர்களின் எண்ணத்துள் என்றும் நிறைந்தவனே. உலகம் அனைத்திற்கும் உயிரானவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.

Labels: , ,

Saturday, January 12, 2008

பந்தணை விரலி பங்கா எழுந்தருள்

 
திருசிற்றம்பலம் 

திருப்பள்ளியெழுச்சி # 8






முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்
பந்தணை விரலியும், நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெறுந்துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!..........(8)







பொருள்: அனைத்திற்கும் முற்பட்ட முதலும், நடுவும், பிரளய காலத்திற்கு பின்னும் நிற்கும் முடிவும் ஆனவனே! அயன்,அரி,அரன் என்னும் மூவராலும் உன் தன்மையை அறிய முடியவில்லை என்றால் வேறு யாரால் தான் அறிய முடியும்?


இத்தகைய அருமையுடைய நீ, பந்து வந்து அணைகின்ற காந்தள் விரல்களையுடைய உமையம்மையுடன் நீவீரும் வந்து உன் அடியார்களாகிய எங்கள் பழமையான குடிசைகள் தோறும் எழுந்தருளியிருக்கிறாய்! பரம் பொருளே! எம்பெருமானே! கருணை வள்ளலே!

நெருப்பைப் போன்ற உன் சிவந்த திருமேனியைகாட்சியையும் தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த கோயிலையும் காட்டி, என் குரு மூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, என்னை ஆட்கொண்ட அமுதம் போன்றவனே! பள்ளி எழுந்தருள்க!

(குருந்த மரத்தடியில் குருவாய் ,  எம்பெருமான் தானே வந்து மாணிக்கவாசகரை திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட எளிமையை இங்கே பாடுகின்றார் இப்பாடலில்)

Labels: , , ,

Friday, January 11, 2008

உத்தரகோச மங்கைக்கரசே பள்ளியெழுந்தருள்

திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 7



அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
எளிதென அமரரும் அறியார்;
இதுஅவன் திருவுரு, இவன்அவன் எனவே
எங்களை ஆண்டு கொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச
மங்கையுள்ளாய்; திருப்பெருந்துறை மன்னா!
எதுஎமைப் பணிகொளும் ஆறு? அது கேட்போம்;
எம்பெருமான்; பள்ளி எழுந்தருளாயே!........(7)






பொருள்: தேன் சொரியும் மலர்ச் சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோச மங்கை திருத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் சிவபெருமானே! திருப்பெருந்துறை அரசே!

பரம்பொருளாகிய பழச்சுவை போன்று தித்திப்பானதா? தேவாமிர்தம் போன்றதா? அறிய முடியாததா? எளிதானதா? என்று தேவர்களாலும் அறிய முடியாதது. ஆனால் " இதுவே அவனுடைய திருவுருவம், இவனே அந்த கருணைக்கடல் சிவ பெருமான்" என்று நாங்கள சுட்டிக் காட்டி சொல்லும்படி எளி வந்த கருணையினால் எங்களை அடிமையாக ஏற்றுக் கொண்டு இந்த மண்ணிலே எழுந்தருள்வாய்!

நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது? எம்பெருமானே! அந்த முறைமையை நீ எங்களுக்கு அருளினால் அவ்வாறே நாங்களும் ஒழுகுவோம்! எம்பெருமானே எங்களுக்கு அருள பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!

Labels: , ,

Thursday, January 10, 2008

திருப்பள்ளியெழுச்சி # 6

 
திருசிற்றம்பலம்



பப்பற வீட்டிந் துணரும் நின் அடியார்
பந்தணை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா!
செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெரு மானே!
இப்பிறப் பறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்ம்பெரு மான்; பள்ளி எழுந்தருளாயே!........(6)



அணங்கின் மணவாளா பள்ளியெழுந்தருள்


பொருள்: மலையரசன் பொற்பாவை பார்வதி தேவியின் மணாளனே! செந்தாமரை மலர்கள் மலரும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே!

பரபரப்பை அறவே விட்டு அகக்கண்ணில் உன்னையே கண்டுணரும் மெய்ஞானியர் பலரும், இந்த மண்ணுலகிற்கு வந்து பாசக் கட்டுக்களை அறுத்த பலரும் கூட மானிட இயல்பினால் மாயையிலே அகப்பட்டு மை தீட்டிய கண்களை உடைய பெண்களாகிய நாயகி பாவம் கொண்டு உன்னைத் தலைவனாகக் கொண்டு வணங்குகின்றனர்.

இந்தப்பிறவிப் பிணியிலிருந்து எம்மை காத்து, முக்தியை தந்தருள, எம்மை ஆட்கொண்டு அருள் புரிய எம்பெருமானே! பள்ளி நீங்கி எழுந்தருள்வாயாக.


பந்த பாசத்தை விட்டு அந்த இறைவன் திருவடியில் சரணடைந்து மாயையிலிருந்து விடுபட அவன் அருளால் மட்டுமே முடியும் என்பதை உணர்த்தும் பதிகம்.

Labels: , ,

Wednesday, January 09, 2008

திருப்பள்ளியெழுச்சி # 5



திருசிற்றம்பலம்




"பூதங்கள் தோறுநின் றாய்" எனின் அல்லால்
"போக்கிலன் வரவிலன்" எனநினைப் புலவோர்
கீதங்கள்பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரி யாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்; பள்ளி எழுந்தருளாயே! ............(5)




திருப்பெருந்துறை மன்னா பள்ளியெழுந்தருள்


பொருள்: குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் அரசே! எண்ணத்திற்க்கும் எட்டாதவனே!

உன்னை ஞானியர்கள் நிலம், நீர், நெருப்பு,காற்று, வானம் என்னும் ஐந்து பூதங்களில் கலந்து நிற்கின்றாய் என்கின்றனர். உனக்கு தோற்றமுமில்லை, அழிவும் இல்லை என்று புலவர்கள் உன்னை புகழ்ந்து ஆடிப்பாடுகின்றனர். ஆனால் உன்னைக் நேராகக் கண்டு அறிந்தவர்களை நாங்கள் காதாலும் கேட்டு அறிந்திலோம்.

சிவபெருமானே! எங்கள் கண் முன்னே வந்து உனது திருக்காட்சியை வழங்கி எங்கள் குற்றங்களையெல்லாம் நீக்கி, எங்களை அடிமையாக ஏற்று அருள் செய்கின்ற எம்பெருமானே! பள்ளி எழுந்து அருள்வாயாக!

Labels: , ,

Tuesday, January 08, 2008

இன்னருள் புரியும் அரசே பள்ளியெழுந்தருள்


திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 4



இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!.........(4)


பொருள்:அடிமையான என்னையும் ஆண்டு கொண்டு அருள் புரியும் திருப்பெருந்துறையில் கோவில் கொண்ட சிவபெருமானே!

உனது சந்நிதியில் வணங்கும் அடியவர்கள்தான் எத்தனை விதம். இனிமையான இசையை பொழிந்து கொண்டிருக்கும் வீணையையுடையவர்கள் ஒரு பக்கம்; யாழினை உடையவர்கள் ஒரு பக்கம்; வேத மந்திரங்களுடன், துதிப்பாடல்களையும் பாடிக்கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம்; நெருங்க தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை கைகளில் ஏந்தி உனது தரிசனத்திற்காக காத்து நிற்பவர் ஒரு பக்கம்; தலை வணங்கி தொழுபவர்களும், அன்பு மேலீட்டால் அழுபவர்களும், மெய் மறந்து துவள்பவர்களும் ஒரு பக்கம்; தலையின் மீது இரு கைகளையும் குவித்து அஞ்சலி செலுத்துவோர்கள் ஒரு பக்கம்.

இவ்வாறு அடியார்களை ஆட்கொண்ட வள்ளலே! ஒரு தகுதியும் இல்லாத அடியேனையும் ஆட்கொண்டு இனிய அருள் வழங்கும் எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க.

Labels: , ,

Monday, January 07, 2008

இணையார் திருவடி காட்ட பள்ளியெழுந்தருள்


திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 3




கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்கு
தேவ! நற் செறி கழற் றாளினை காட்டாய்;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய்;
எம்பெருமான்; பள்ளி எழுந்தருளாயே!..........(3)





பொருள்: மஹா தேவா! மால் அயன் உட்பட யாராலும் முழுமையாக அறிய முடியாத அண்ணாமலையானே; உண்மையான அடியவர்களாகிய எங்களுக்கு அறிந்து அனுபவிப்பதற்கு எளியவனே! திருப்பெருந்துறையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சிவபெருமானே!

அழகிய குயில்கள் மெல்லிய குரலில் பாடுகின்றன; கோழிகள் கூவுகின்றன; நீர்ப் பறவைகள் ஒலிக்கின்றன; சங்கம் முழங்குகின்றது. நட்சத்திரங்கள் ஒளி மங்கின, சூரிய ஒளி அதிகரிக்கின்றது. இவையெல்லாம் விடியலை உணர்த்துகின்றன.

எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக! திருவுள்ளத்தில் விருப்பம் கொண்டு அடியவர்களாகிய எங்களுக்கு வீரக் கழல் அணிந்த இரண்டு திருவடிகளையும் காட்டி அருள்வீர்களாக.

Labels: , ,

Sunday, January 06, 2008

அருட்செல்வத்தை அருளும் திருக்கயிலைக்கரசே பள்ளியெழுந்தருள்


திருச்சிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 2





அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது; உதயம்நின் மலர்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர்மலர, மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன்; இவையோர்
திருப்பெருந்துறை சிவபெருமானே;
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே;
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே
..........(2)



பொருள்: திருப்பெருந்துறையிலே கோயில் கொண்டுள்ள சிவபெருமானே! அன்பர்களுக்கு அருட்செல்வத்தை அருளும் திருக்கயிலைக்கரசே! அலை கடல் போன்ற கருணை வள்ளலே!

கிழக்கே அருணோதயம் துவங்கி விட்டது இருள் அகன்று விட்டது; உன் திருமுகம் ஆன உதய கிரியில் உன் கருணையாகிய சூரியன் மேலே எழுந்தொறும் உன் கண்களாகிய மலர்கள் மலர்கின்றன.

அண்ணலாகிய தேனை நாடும் (அடியார்களாகிய) அறு கால வண்டுகளின் திரள்கள் முறையே தோத்திர முழக்கம் செய்கின்றன. எனவே எங்களுக்கு அருள பள்ளி எழுந்தருள்வாயாக எம்பெருமானே !.

Labels: , ,

Saturday, January 05, 2008

எருதுக்கொடியையும் எம்மையும் உடையவனே பள்ளி எழுந்தருள்

திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 1



இறைவன் எங்கும் நிறைந்தவன், எல்லா பொருட்களிலும் அந்தர்யாமியாக எழுந்தருளி இருப்பவன், சகல வல்லமை கொண்டவன். அவர் உறங்குவதும் இல்லை விழிப்பதும் இல்லை, ஆனால் மானிட இயல்பினால் நாம் அந்த இறைவனை இரவு திருப்பள்ளிப்படுத்துகின்றோம், அவர் உறங்குவதாக பாவித்து, பிறகு காலையில் அவரை திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புகின்றோம். ஓர் நாமம் ஓர் உருவம் இல்லாத அந்த பரம்பொருளுக்கு நாம் ஆயிரம் நாமம் பாடி வணங்குவதைப் போன்றதே இதுவும்.

திருப்பள்ளியெழுச்சி என்பது இவ்வாறு இறைவனை துயில் எழுப்புவதாகவும் கொள்ளலாம், நம்மில் ஆன்மிக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவைத் துயிலெழுப்பி பரம கருணா  மூர்த்தி இறைவனின் கருணையை உணரச்செய்வதாகவும் கொள்ளலாம். "சுப்ரபாதம்" என்பது இதன் இணையான சமஸ்கிருத சொல்.

 அப்படி திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை,  குருவாக வந்து தானே வந்து ஆட்கொண்ட வள்ளலை எழுப்பி அனைத்து வளங்களையும் நலங்களையும் வழங்க பிரார்த்திப்பது போல் அமைந்த பாடல்கள் திருப்பள்ளுயெழுச்சிப் பாடல்கள்.  மாணிக்க வாசக சுவாமிகள் பாடிய பதிகங்கள் இவை.

எம்பெருமானே எங்களுக்கு சகல மங்களங்களையும் தந்து அருள்வீர்களாக என்று வேண்டும் வண்ணம் அமைந்தவையே இந்த திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள். மார்கழி மாதம் திருவெம்பாவையுடன் இப்பதிகங்களும் திருக்கோவில்களில் பாராயணம் செய்யப்படுகின்றன.




திருசிற்றம்பலம்


மாணிக்கவாசக சுவாமிகள்
திருப்பெருந்துறையில் அருளியது
(திரோதன சுத்தி)


போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே!
புலர்ந்தது பூங்கழற்கிணைதுணை மலர் கொண்டு
ஏற்றி நின் திருமுகத்தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றி தழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ்
திருப்பெருந்துறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எம்மை உடையாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.........(1)





பொருள்:போற்றி! என் வாழ்விற்கு மூலப்பொருளே! சேற்றில் செந்தாமரைகள் இதழ் விரிக்கும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் எம்பெருமானே! உயர்த்திய எருது கொடி உடையவனே! சிவபெருமானே போற்றி!

பொழுந்து விடிந்தது, உனது அழகிய மலர் போன்ற திருவடிகள் இரண்டிற்கும் ஒன்றுக்கொன்று ஒத்த மலர்கள் கொண்டு தூவினோம்; எங்களுக்கு அருள் புரியும் பொருட்டு உன் திருமுகத்தில் மலரும் அழகிய புன்னகையை எங்கள் உள்ளத்தில் நிறுத்தி உன் திருவடிகளை வணங்குகிறோம். எம்மை தொண்டனாக ஆட்கொண்ட எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க

Labels: , , ,

Friday, January 04, 2008

திருவெம்பாவை # 20

 
திருசிற்றம்பலம் 




போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்

போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றியெல் லாவுயிக்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்! ..........(20)


பொருள்: திருவெம்பாவையின் துவக்கத்தில் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி என்றருளிய மாணிக்க வாசகர், முடிவில் அப்பெருஞ்சோதி ஐந்தொழில் புரியும் பொருட்டு திருவுள்ளங் கொண்டருளும் பொருட்டு ஆதியாயிற்று. ஐந்தொழில் செய்து முடித்ததில் அந்தமாயிற்று. முதலும் முடிவும் முழுமுதற்பொருட்கு முதலும் முடிவும் நேர்கின்றன. ஐந்தொழில் புரிவதால் அத்தகைய ஆதியும் அந்தமும் எம்பெருமானது திருவடிகளே.


அந்த திருவடிகள் நம்மை காத்தருள்க. தோற்றம்(படைப்பு), போகம்(காப்பு),ஈறு(அழிப்பு), காணாமை(மறைப்பு), ஆட்கொண்டருளல்(அருளல்) என்னும் ஐந்தொழில்களும் அனைத்து உயிர்களுக்கும் பொது, ஐந்தொழில்களும் திருவடிகளே செய்யும். காணாமை அடி முடி தேடிய வரலாற்றால் குறிப்பித்தது உய்தல் எல்லாவுயிரொடும் எமக்கும் உரித்து.

முதல் ஏழு அடிகளிலும் திருவடிகள் காத்தல் வேண்டும் என்றபடி ஈற்றடியில் பொங்கு மடுவாக விளங்கும் தேவ தேவனின் திருவடிகளில் சேர வேண்டும் என்ற மார்கழி நீராடல் என்ற "தொல் வழக்கம்" கூறப்பட்டது.

(பாவை நோன்பின் நோக்கம் அந்த எம்பெருமானின் தாள் அணைவதற்கே என்பதை உணர்க)


நடராச பெருமானது உருவத்தில் தோற்றம் துடியதனில், தோயும் திதி அமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமாய் ஊற்றும் மலர்பதத்தே உற்ற திரோதம், முத்தி நான்ற மலர் பதத்தே நாடு. இவ்வுண்மை விளக்குத் திருவெண்பாவிற் திருக்கரங்கள் முத்தொழிலுக்கு இடமாக கூறப்படினும், இத்திருவாசகம் உணர்த்தும் உண்மை திருவடிகளேயாகக் கொள்க. அருவம் அருவுருவம் உருவம் மூன்றும் கடந்த ஞான சொரூபத்தில் எவ்வுறுப்பும் ஞானபாவனையாகத்தாம் அமையும்; உண்மையில் உருவமில்லை. ஞானமே அம்பலம் ஆனந்தமே திருக்கூத்து

திருச்சிற்றம்பலம்


இத்துடன் திருவெம்பாவை நிறைவுற்றது இனி திருப்பள்ளியெழுச்சிப் பதிகங்களைக் காண்போம்.

மாணிக்க வாசகப்பெருமானின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்டு நலம் பெற  http://www.shaivam.org/gallery/audio/markazi_murali.htm  இங்கு செல்லவும்.

Labels: , , ,

Thursday, January 03, 2008

திருவெம்பாவை # 19

 
திருசிற்றம்பலம் 



உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான்! உனக்கொன் றுரைப்போம்கேள்!
எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க;
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க;
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க;
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு? எமக்கேலோர் எம்பாவாய்!..........(19)



பொருள்: எங்கள் பெருமானே! "உன் கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம்" என்ற சொல் பழமையானது. அதை புதுப்பித்து கூற வேண்டிய அச்சம் எங்களுக்கு தோன்றியுள்ளது. ( இம்மண்ணில் பிறந்த யாவரும் இறுதியில் எம்பெருமானின் திருவடிக்கமலங்களில் தான் சென்று சேர்கின்றனர், அதுவல்லாமல் மீண்டும் பிறவி வேண்டாம் என்பதை இவ்வாறு கூறுகின்றனர்)

குழந்தைகளின் துன்பத்தை நீக்கி இன்பத்தை கொடுப்பவள் தாய் தான். நாங்கள் குழந்தைகள் நீயே தாய். எங்கள் விருப்பத்தை நீதான் நிறைவேற்ற வேண்டும். அந்த விண்ணப்பத்தை கேட்டு அருள்!

எங்கள் கொங்கைகள் உன் அன்பர் அல்லாதார்கள் தோளைத் தழுவாதொழிக. எங்கள் கைகள் உனக்கு அல்லாமல் வேறு எந்த பணிகளையும் செய்யாதொழிக. எங்கள் கண்கள் இரவும் பகலும் உன்னைத் தவிர வேறொன்றையும் காணாதொழிக.

எங்கள் தலைவனாகிய தாங்கள் அடிமைகளாகிய எங்களுக்கு இந்த வண்ணம் அருள் புரிந்தாயானால், கதிரவன் எந்த திசையில் உதித்தாலும் எங்களுக்கென்ன குறை?


( மனம், காயம், வாக்கு ஆகியவற்றால் செய்யும்   எல்லா செயல்களும் அந்த சிவபெருமானுக்கே அர்ப்பணம் என்னும் சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் பதிகம்)

(பாவை நோன்பின் நோக்கமான நல்ல கணவனை அடைய வேண்டும் என்பதைக் கூறும் பாடல் என்பாருமுண்டு. )

மாணிக்க வாசகப்பெருமானின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்டு நலம் பெற  http://www.shaivam.org/gallery/audio/markazi_murali.htm  இங்கு செல்லவும்.

Labels: , ,

Wednesday, January 02, 2008

திருவெம்பாவை #18

 

திருசிற்றம்பலம் 



அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கி தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாகி அலியாய் பிறங்கொளி சேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே! இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!..........(18)



பொருள்: பெண்ணே! திருவண்ணாமலையில் எம்பெருமான் மாலும் அயனும் அரிய ஒண்ணா அருள் மலையாய், அருட்சோதிப்பிழம்பாய், எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அவர் திருவடியில் விழுந்து வணங்கும் தேவர்களின் மகுடங்களில் உள்ள பல்வேறு இரத்தினங்களின் ஒளியானது எம்பெருமானின் திருவடி பேரொளியின் முன் வீறற்று விடுகின்றன, அவை போல கதிரவன் எழுந்ததும் விண் மீன்கள் தங்கள் ஒளி இழந்து மறைந்து விட்டன, பொழுதும் விடிந்து விட்டது.

எம்பெருமான், பெண்ணானவன், ஆணானவன், அலி மூன்றுமானவன். ஒளிதரும் கதிரவனும், மதியும் சுடருமான முக்கண்ணனானவன். விண்ணாகவும், மண்ணாகவும், மற்றுமுள்ள வேறாக உள்ள அனைத்துமானவன். அவன் நம் கண் முன்னே அருட்காட்சி தரும் நிறைந்த அமுதமுமாகி நிற்கின்றான். அந்த பெருமானுடைய பொற்திருவடிகளைப் பாடிப்பரவி, நாம் உய்ய மலர்கள் நிறைந்த இந்த நீரிலே பாய்ந்து நீராடுவோமாக.

அண்ணாமலையார் மகிமை காண செல்லுங்கள் முதல் பதிகம்  http://thiruvempavai.blogspot.in/2007/12/1.html

Labels: , ,

Tuesday, January 01, 2008

திருவெம்பாவை #17

 

திருசிற்றம்பலம் 




செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலாதக்
கொங்கண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமல பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!..........(17)

பொருள்: நங்கள் சிவபெருமான் பரம கருணாமூர்த்தி! அவர் சிவந்த கண்களைக் கொண்ட திருமால், நான்முகன், மற்றுமுள்ள மற்ற தேவர்கள் ஆகியவர்களிடத்திலும், வேறு எங்கும் இல்லாத இன்பம் தனது அடியவர்களாகிய நம்மிடம் உள்ளதாக அருள் புரிந்தவர்.

நம்முடைய குற்றங்களையெல்லாம் நீக்கி குணம் மட்டும் கொண்டு கோதாட்டும் உத்தமர். எளி வந்த கருணையினால் நமக்காக இரங்கி இம்மண்ணுலகில் தேன் சிந்தும் மலர் சூடிய கருங்கூந்தலையுடைய உமையம்மையுடன் ரிஷபத்தில் இறங்கி நம்முடைய வீடுகளில் வந்து எழுந்தருளி தன் பொற்பாத தரிசனம் தந்தருளிய வள்ளல்.

பெண்ணே! அந்த அருள்கனிந்த திருக்கண்களையுடைய அரசனை, அடிமைகளாகிய நமக்கு தெவிட்டாத தெளிந்த அமுதமானவனை, நம்முடைய சிவபெருமானைப் பாடி மங்களம் பெருகி விளங்க தாமரை மலர்கள் நிறைந்த இந்த நீரில் பாய்ந்து நீராடுவோமாக!

Labels: , ,