THIRUVEMBAVAI திருவெம்பாவை

இந்த உலகைப் படைத்துக் காக்க சிவனில் நவசக்திகள் தோன்றி செயல்படுவதை திருவெம்பாவையின் பாடல்கள் உணர்த்துகின்றன.ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை போற்றி மாணிக்க வாசகர் பாடிய திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் படித்து மகிழுங்கள்.

Monday, December 25, 2006

THIRUVEMBAVAI

திருசிற்றம்பலம்

திருப்பாவையும் திருவெம்பாவையும் உணர்த்தும் நன்னெறிகள்


பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையிலே உயர்ந்தவற்றைக் கூறும் போது "மாதங்களில் நான் மார்கழி" என்கிறார். திருக்கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் கோவில்களில் இறைவனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகின்றது. நடராஜப் பெருமானின் ஆருத்ரா தரிசனமும், மஹா விஷ்ணுவின் வைகுண்ட ஏகாதசியும் வரும் மாதமும் இதுதான். குளிர் காலத்தில் காலை வேளையில் ஓஜோன் என்னும் வாயு மிகுந்து உள்ளதால் உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்ற அறிவியல் உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் நம்மை அதிகாலையில் எழுந்து பயன் பெற இந்த வழக்கத்தை ஏற்படுத்தினர் போலும்.

மானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தான் தேவர்களுக்கு ஒரு நாள் அவர்களுடைய நாள் தொடங்குகின்ற மாதம் தான் மார்கழி மாதம். எனவே மார்கழி மாதம் நாம் செய்கின்ற பூசை தேவர்களின் அதிகாலை பூசை என்பது ஐதீகம்.


பண்டை காலம் தொட்டே மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் எழுந்து கோலம் இட்டு வாசலை அலங்கரித்து பாவை நோன்பு இருப்பது வழக்கமாக உள்ளது. கோவில்களிலே சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்ஆண்டாள் பாடியருளிய திருப்பாவையும், திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற பெருமை பெற்ற திருவாசகத்தின் ஒரு பகுதியான மாணிக்க வாசக சுவாமிகள் பாடிய திருவெம்பாவையும் இசைக்கப்படுகின்றன. இவ்விரண்டும் நமக்கு வலியுறுத்தும் நன்னெறிகளைப் பற்றி பார்ப்போமா?



இந்த மாய உலகத்திலே சம்சார பந்ததிலே உழலுகின்ற ஜீவாத்மா, பரமாத்மாவுக்கே உரியாதாயிருக்கையில் அவனையே கரணங்கள் யாவற்றிலும் அனுபவித்து இன்புறுதலும், அவன் பிரிந்த காலத்து துன்புறுதலும் அடையுமாதலால் தம்மை தலைவியாக பாவித்தும் இறைவனை தலைவனாகப் பாவித்தும் ஆண்டாள் நாச்சியாரும் மாணிக்க வாசகரும் முறையே பாடியுள்ள பாடல்களே திருப்பாவையும், திருவெம்பாவையும், ஒரே வகையான நெறிகளையே கூறுகின்றன.


இரண்டிற்கும் அடிப்படையாக விளங்குவது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இரண்டறக் கலப்பதுதான். பாவை நோன்பு ஒழிக்க முடியாத உறவு என்பது பகவானுக்கும் உள்ள பரஸ்பர பந்தத்தை நிலை நிறுத்துகிறது. அதாவது இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் எம்பெருமான் , அவனைப் பற்றாகக் கொண்டால் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவன் துணையாக இருப்பான் என்ற தத்துவத்தை விளக்குவதே பாவை நோன்பு.


திருப்பாவை, திருவெம்பாவை இரண்டும் "ஆன்ம நேயத்தை" போதிக்கின்றன. ஒரு ஆன்மா பிற ஆன்மாக்கள் மீது நேயம் கொண்டு தன்னோடு அவை அனைத்தும் இறைவனை அடையுமாறு செய்யும் நோக்கில் பாடப்பட்ட பாடல்களே இவை. "வஸுதைவ குடும்பகம்" என்று வட மொழியில் உலகம் எல்லாம் ஒரே குடும்பம் என்றும் நமது தமிழில் " யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் " என்பதும் இந்நெறிதானன்றோ?


முத்தன்ன வெண்ணகையாய் முன் வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என் றள்ளூறித்
தித்திக்க பேசுவாய் வந்துன் கடை திறவாய் என்று மணி வாசகரும்,


தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலனைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்



என்று ஆண்டாளும் பாடுவது சம்சார பந்தத்திலே உழலும் ஆன்மாவைப் பார்த்து காலம் வந்து விட்டது இப்போதாவது விழித்துக்கொள் இறைவனின் திருப்பாதங்களில் சரணடைந்து விடு என்று கூறுவதல்லவோ.


மேலும் வைகறை துயிலெழும் மிக நல்ல நெறியை நமக்கு உணர்த்துவதை இரண்டிலும் நாம் காணலாம்.

ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?



கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழிழ் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்
என்று மணி வாசகரும்

புள்ளும் சிலம்பின காண்! புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கெட்டிலையே?


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்



என்று ஆண்டாள் பாடுவதும் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலையிலே எழுவதும் பின்பு இறைவனை வழிபடுவதும் நமக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நமக்கு வலியுறுத்தவே.

அடுத்த நெறி உடல் சுத்தி என்னும் நீராடல், இது புற சுத்தி இதை திருப்பாவையும் திருவெம்பாவையும் இரண்டும் மிக நன்றாக வலியுறுத்துகின்றன.



மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்
என்று திருப்பாவை தொடங்குகிறது.



போற்றி யாம் உய்யஆட் கொண்டருளும் பொன் மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்
என்று திருவெம்பாவை முடிகின்றது.



இங்கே மார்கழி நீராடல் என்பது அந்த பரம்பொருளுடன் இரண்டறக் கலப்பதை குறிக்கின்றது அதுவே முக்தி.



நம்மை நல்வழிப்படுத்துகின்ற இந்த இரு பதிகங்களையும் சிறு வயது முதலே பாராயணம் செய்து வந்துள்ளேன். அடியேனது ஊர் உடுமலைப்பேட்டையில், பிரசண்ட வினாயகர் கோவிலில் மார்கழி பனி அதிகாலையில் பாராயணம் செய்து பெற்ற இன்பம் அலாதி. அந்த இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த தொடர். இந்த மார்கழி மாதம் முப்பது நாளும் தொடரும். திருப்பாவை, திருவெம்பாவை, மாணிக்க வாசகரின் திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றின் பாடல்களை பொருளுடன் அளிக்க முயற்சி செய்துள்ளேன். குறை இருந்தால் மன்னிக்கவும்.

Labels: , ,